பெருமாள்பட்டில் சாலை சேதம் குடியிருப்பு மக்கள் கடும் அவதி
பெருமாள்பட்டு;பெருமாள்பட்டு குடியிருப்பு பகுதியில் சாலைகள் சேதமடைந்துள்ளதால், குடியிருப்பு மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். திருவள்ளூர் அருகே பெருமாள்பட்டு கிராமம் அமைந்துள்ளது. இங்கிருந்து, புதுச்சத்திரம் செல்லும் நெடுஞ்சாலையோரம் எல்.வி.பி., காலனி, முல்லை நகர், மகாலட்சுமி நகர், சத்யசாய் நகர் உட்பட 10க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன. இப்பகுதியில், திருக்கண்டீஸ்வரர் கோவில் எதிரே உள்ள சாலை மிகவும் சேதடைந்து, மெகா பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், குடியிருப்பு மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். அவசர மருத்துவ தேவைக்கு ஆம்புலன்ஸ் வருவதில் கூட சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் குப்பை அள்ளுவதற்கு வாகனம் வராததால், குப்பை குவிந்துள்ளது. இதனால், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த சாலையை சீரமைக்க பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என. குடியிருப்பு மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். எனவே, மாவட்ட கலெக்டர் பெருமாள்பட்டு ஊராட்சியில் ஆய்வு செய்து, சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டுமென, குடியிருப்பு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.