விவசாயிடம் ரூ.92,000 அபேஸ் பிக்பாக்கெட் பெண்களுக்கு வலை
திருத்தணி, திருவாலங்காடு ஒன்றியம், சந்தானகோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்தாஸ், 53; விவசாயி. இவரது மனைவி சாந்தி, 48, என்பவர், மகளிர் சுயஉதவிக் குழு தலைவி.இவர், குழுவில் கடன் வாங்கியவரிடம் இருந்து பணம் வசூலித்து, திருத்தணி ம.பொ.சி., சாலையில் உள்ள இந்தியன் வங்கியில் கட்டுவது வழக்கம். அந்த வகையில், மகளிரிடம் இருந்து வசூலித்த தொகை, 2 லட்சம் ரூபாயை சாந்தி நேற்று கணவரிடம் கொடுத்து வங்கியில் செலுத்திவிட்டு வருமாறு கூறினார்.அவரும் பிற்பகல் 2:30 மணிக்கு வங்கிக்கு சென்றுள்ளார். முதலில் 1.02 லட்சம் ரூபாயை குழு கணக்கில் கட்டினார். பின், மற்றொரு கடன் கணக்கில், 92,000 ரூபாய் கட்டுவதற்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து, பணத்தை பிளாஸ்டிக் கவரில் வைத்துக் கொண்டு வரிசையில் நின்றிருந்தார்.வங்கி அலுவலரிடம் விண்ணப்பத்தை கொடுத்துவிட்டு, பிளாஸ்டிக் கவரை பார்த்த போது, கவர் கிழிக்கப்பட்டு, பணம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.தொடர்ந்து, மோகன்தாஸ் திருத்தணி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வங்கிக்கு வந்து பெண் மேலாளருடன் நடந்த சம்பவத்தை கூறி, அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக ஆய்வு செய்தார்.அதில், மோகன்தாஸ் பின்னால் ஒரு பெண் சுடிதார் அணிந்தும், மற்றொரு பெண் சேலை அணிந்தும் வரிசையில் நின்றிருந்தனர். சிறிது நேரத்தில் வரிசையில் நிற்காமல் இரண்டு பெண்களும் அவசரம் அவசரமாக வங்கியில் இருந்து வெளியேறியது தெரிய வந்தது.அதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய இரண்டு பெண்களையும் தேடி வருகின்றனர்.