இணைப்பு சக்கரத்தை கழற்றி பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர்கள் பறிமுதல்: கலெக்டர் எச்சரிக்கை
திருவள்ளூர்:மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட ஸ்கூட்டர்களின் இணைப்பு சக்கரத்தை கழற்றி பயன்படுத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என, கலெக்டர் எச்சரித்துள்ளார்.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், தகுதிவாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு, 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பட்டதாரிகள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் மற்றும் சொந்த தொழில் புரிவோர் தங்களது போக்குவரத்து தேவைக்கு, இந்த இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரால் பயனடைந்து வருகின்றனர்.அவற்றின் இணைப்பு சக்கரத்தை கழற்றி, விட்டு மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர் அல்லது நண்பர்கள் பயன்படுத்தி வருவதாக ஆய்வில் தெரிய வருகிறது. இச்செயல், மாற்றுத்திறனாளிகள் தங்களது சொந்த தேவையை, பிறர் உதவியின்றி செயல்படுத்த ஏதுவாக உள்ள தமிழக அரசின் நோக்கத்தை சிதைப்பதாக உள்ளது.எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட வாகனத்தின் இணைப்பு சக்கரங்களை கழற்றி பயன்படுத்தும் ஸ்கூட்டர்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், இந்த ஸ்கூட்டரின் இணைப்பு சக்கரங்களை கழற்றுவதற்கான பணிசெய்யும் இருசக்கர வாகன பழுது நீக்குவோர் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.