தெருவில் வழிந்தோடும் கழிவுநீர் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்
திருவாலங்காடு:முத்துக்கொண்டாபுரம் ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், பெருமாள் கோவில் தெருவில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவாலங்காடு ஒன்றியம் முத்துக்கொண்டாபுரம் கிராமத்திற்கு உட்பட்ட பெருமாள் கோவில் தெருவில், 400க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் மழை காலத்தில், மழைநீருடன் கழிவுநீர் கலந்து தெருக்களில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவுநீர் கால்வாய் அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.