அரசு பேருந்தில் ஆறரை சவரன் நகை திருட்டு
திருத்தணி,:திருத்தணி காந்திரோடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன், 50. இவரது மனைவி பிரியா, 40. இவர்கள் நேற்று முன்தினம் இரவு, 9:30 மணியளவில், சோளிங்கரில் இருந்து, திருத்தணி வர, தடம் எண்: 777 அரசு பேருந்தில் ஏறினர். அப்போது, பிரியா தன் கழுத்தில் அணிந்திருந்த ஆறரை சவரன் தங்கச் செயினை, கழற்றி தன் கைப்பையில் வைத்துக் கொண்டார். இரவு, 10:15 மணியளவில் திருத்தணி ரயில் நிலையம் நிறுத்தத்தில், கைப்பையை மறந்து, பேருந்து இருக்கையிலேயே விட்டுவிட்டு தம்பதி இறங்கினர். பேருந்து சிறிது துாரம் சென்றதும், கைப்பையை பேருந்தில் தவறிவிட்டது, பிரியா நினைவுக்கு வந்தது. திருத்தணி பேருந்து நிலையத்திற்கு சென்று பேருந்தில் பார்த்த போது, கைப்பை மர்ம நபர்களால் திருடப்பட்டது தெரிந்தது. திருத்தணி போலீசில் பிரியா அளித்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.