பிச்சாட்டூர் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தம்
ஊத்துக்கோட்டை: பிச்சாட்டூர் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றுவது நேற்று முதல் நிறுத்தப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் உருவாகும் ஆரணி ஆற்றின் நடுவே, பிச்சாட்டூர் கிராமத்தில் ஏரி கட்டப்பட்டு உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு, 1.853 டி.எம்.சி., நீர்மட்டம் 31 அடி. மழைநீர் முக்கிய நீராதாரமாக உள்ளது. 'மோந்தா' புயல் காரணமாக பெய்த பலத்த மழையால், ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், நீர்மட்டம் 'கிடுகிடு'வென உயர்ந்தது. கடந்த 23ம் தேதி ஏரியின் பாதுகாப்பை கருதி, இரண்டு மதகுகள் வழியே, வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. பிச்சாட்டூர் ஏரியின் உபரிநீர், நந்தனம் மற்றும் அதைச் சுற்றியுள்ள காட்டு பகுதிகளில் இருந்து வந்த மழைநீர், ஆரணி ஆற்றில் சேகரமாகி வெள்ளப்பெருக்காக மாறியது. தற்போது மழை நின்றதால், உபரிநீர் திறப்பது நிறுத்தப்பட்டது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, ஏரியில் 1.6 டி.எம்.சி., நீர் உள்ளது. நீர்மட்டம் 29.20 அடி. வினாடிக்கு, 150 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.