உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மழை பெய்தால் சகதியாக மாறும் ஆரம்பாக்கம் ரயில் நிலைய வளாகம்

மழை பெய்தால் சகதியாக மாறும் ஆரம்பாக்கம் ரயில் நிலைய வளாகம்

கும்மிடிப்பூண்டி, ஜூலை 28-ஆரம்பாக்கம் ரயில் நிலைய வளாகம் முழுதும் சகதியாகவும், மாம்பழ கழிவுகளின் துர்நாற்றம் வீசுவதாலும், ரயில் பயணியர் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சென்னை சென்ட்ரலில் இருந்து ஆந்திரா, பீஹார், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநிலங்களை இணைக்கும் முக்கிய ரயில் பாதையில், தமிழகத்தின் கடைக்கோடி ரயில் நிலையமாக ஆரம்பாக்கம் உள்ளது. ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை, நெல்லுாரில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக, சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள், ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. இதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வியாபாரிகள், வேலைக்கு செல்வோர் என, ஆயிரக்கணக்கான ரயில் பயணியர் ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும், ஆரம்பாக்கம் ரயில் நிலைய முகப்பு வளாகம் முழுதும் சகதியாக மாறிவிடுகிறது. இதனால், அவ்வழியாக ரயில் நிலையத்திற்கு செல்லும் பயணியர் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், ரயில் நிலையத்தை ஒட்டி மாம்பழ சந்தை இயங்குவதால், ரயில் நிலைய வளாகம் முழுதும் மாம்பழ கழிவுகள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, ரயில் நிலைய வளாகத்தை மழைநீர் தேங்காதபடி உயர்த்த வேண்டும். மாம்பழ கழிவுகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை