உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பூண்டிக்கு திறக்கப்பட்ட கண்டலேறு நீர் புழல், செம்பரம்பாக்கத்திற்கு திருப்ப முடிவு

பூண்டிக்கு திறக்கப்பட்ட கண்டலேறு நீர் புழல், செம்பரம்பாக்கத்திற்கு திருப்ப முடிவு

சென்னை: கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வரும் நீரை, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திருப்ப, நீர்வளத்துறை முடிவெடுத்து உள்ளது.திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், புழல், தேர்வாய்கண்டிகை ஏரிகள் வாயிலாக, சென்னையில் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.இதில் பூண்டி, சோழவரம் ஏரிகளில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லை. எனவே, இந்த ஏரிகளுக்கு வரும் நீர், செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.இதற்காக, கால்வாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பூண்டி ஏரிக்கு, ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுதோறும், 12 டி.எம்.சி., நீர் திறக்க வேண்டும். தெலுங்கானா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் போது, கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.அந்த நேரத்தில், கண்டலேறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். ஆந்திரா நெல்லுார் மாவட்டத்தின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக, கிருஷ்ணா கால்வாயில் நீர் திறக்கப்படும். இந்த நீர், பூண்டி ஏரிக்கும் வந்து சேரும். தற்போது, கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு நீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த நீரை, முழுமையாக பூண்டி ஏரியில் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. ஆக., மாதம் அவசர கதியில் துவங்கிய,'ஷட்டர்' சீரமைப்பு பணிகள், புதிய நீரளவை அமைக்கும் பணிகள், இதற்கு காரணமாக கூறப்படுகிறது.இதனால், பூண்டி ஏரிக்கு வரும் நீரை, செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளுக்கு கால்வாய் வாயிலாக திருப்ப, நீர்வளத்துறை முடிவெடுத்து உள்ளது. நீர்வரத்தின் அளவைப் பொறுத்து, தேர்வாய்கண்டிகை ஏரியில் அதை சேமிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

கிருஷ்ணா நீர் இன்று வருகை

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் கண்டலேறு அணைக்கட்டில் இருந்து திறந்து விடப்படும் கிருஷ்ணா நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், தேர்வாய்கண்டிகை உள்ளிட்ட நீர் நிலைகளில் நீர்மட்டம் குறைவாக இருந்தது. இதன் காரணமாக ஒப்பந்தப்படி கண்டலேறு அணைக்கட்டில் இருந்து கிருஷ்ணா நீர் கடந்த, 19ம் தேதி காலை, 11:00 மணிக்கு வினாடிக்கு, 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர் சாய்கங்கா கால்வாயில் ராப்பூர், வெங்கடகிரி, காளஹஸ்தி, வரதயபாளையம், சத்தியவேடு வழியே, 152 கி.மீட்டர் பயணித்து, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்டை அடையும். துவக்கத்தில், 500 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது, 1,200 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.நேற்று மாலை, 5:00 மணி நிலவரப்படி, வரதயபாளையம் அருகே கிருஷ்ணா நீர் வந்து கொண்டு இருக்கிறது. அங்கிருந்து, 20 கி.மீ., துாரம் பயணித்து, இன்று காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்டை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் வரும் கிருஷ்ணா நீரை வரவேற்க தமிழக நீர்வள ஆதாரத்துறையினர் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை