போதை பொருள் விற்றால் சீல் :திருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை
திருவள்ளூர்;“திருவள்ளூர் மாவட்டத்தில் போதை பொருள் விற்பனை செய்யும் கடைகளுக்கு. 'சீல்' வைக்கப்படும்” என, கலெக்டர் பிரதாப் எச்சரித்துள்ளார். திருவள்ளுரில் நேற்று, 'போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், 250க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர். கலெக்டர் பிரதாப் பேரணியை துவக்கி வைத்து பேசியதாவது: திருவள்ளுரை போதையில்லா மாவட்டமாக மாற்ற அனைத்து சோதனைச்சாவடிகளிலும், 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லுாரிகளில் ஆசிரியர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. உணவு பாதுகாப்பு துறை வாயிலாக காவல், உள்ளாட்சி அமைப்பு கொண்ட கூட்டு குழுவினர், கடைகளில் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த மாதம் ஐந்து கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. போதை பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், உடனடியாக 'சீல்' வைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.