உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மோசடி கும்பலுக்கு வங்கி கணக்கு கொடுத்து உதவிய 3 பேருக்கு காப்பு

மோசடி கும்பலுக்கு வங்கி கணக்கு கொடுத்து உதவிய 3 பேருக்கு காப்பு

ஆவடி:'ஆன்லைன்' மூலம் பணமோசடியில் ஈடுபடும் கும்பலுக்கு, வங்கி கணக்கு கொடுத்து உதவிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அம்பத்துார், கள்ளிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ராம்குமார், 47. இவர், கடந்த மார்ச் மாதம், 'பேஸ்புக்' பக்கத்தில் விபரங்களை தேடியபோது, 'ஆன்லைன்' பங்குசந்தை குறித்த விளம்பரத்தை பார்த்தார். விளம்பரத்தில் இருந்த மொபைல் போன் எண்ணில் பேசியபோது, 'நீங்கள் முதலீடு செய்யும் பணத்தை பொறுத்து, அதிக லாபம் கிடைக்கும்' என, மர்ம நபர்கள் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அவர்களின் பேச்சை நம்பிய ராம்குமார், மர்ம நபர்கள் கூறிய 13க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளில், 50,000 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை என, பல தவணைகளில் 21.07 லட்சம் ரூபாய் வரை அனுப்பியுள்ளார். ஆனால், மர்ம நபர்கள் கூறியதுபோல, பணமோ... லாபமோ வரவில்லை. முதலீடு செய்த பணத்தையும் எடுக்க முடியாமல் ராம்குமார் தவித்தார். இது குறித்து, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் கடந்த மாதம் புகார் அளித்தார். புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார், திருவொற்றியூரைச் சேர்ந்த ஹோட்டல் மேலாளர் சரவண பிரசாத், 27, அகரம், ஜவஹர் நகரைச் சேர்ந்த டெய்லர் மோகன், 35, மற்றும் புதுப்பேட்டையில் டயர் வியாபாரம் செய்யும் பாசில் மொய்தீன், 38, ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், பாசில் மொய்தீனுக்கு 'ஆன்லைன்' மோசடி கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவரது நண்பர்களான சரவண பிரசாத் மற்றும் மோகன் ஆகியோர் வாயிலாக புதிதாக 'ஜாயின்ட் அக்கவுண்ட்' துவங்கி, மோசடி நபர்களுக்கு வங்கி கணக்கு கொடுத்து உதவியது தெரிந்தது. இதற்காக மூவரும், பல லட்சம் ரூபாய் கமிஷனாக பெற்றது விசாரணையில் தெரிய வந்தது. போலீசார் மூவரையும் கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர். மேலும், மோசடி நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை