மேலும் செய்திகள்
ஆக்கிரமிப்பு கடைகளால் ரயில் பயணியர் அவதி
09-Sep-2025
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை ரயில் நிலைய சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். கவரைப்பேட்டை ரயில் நிலைய சாலையில், 300க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் உள்ளன. இந்த சாலையை தினமும் ஏராளமான பயணியர் மற்றும் பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ரயில் நிலைய சாலை நுழையும் இடத்தில், ஆக்கிரமிப்பு கட்டடங்கள், பழக்கடைகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் சாலை குறுகியுள்ளது. இதனால், பரபரப்பான காலை - மாலை நேரங்களில், ரயில் நிலைய சாலைக்குள் நுழைய முடியாமல், ரயில் பயணியர் தவித்து வருகின்றனர். பல சமயம் குறித்த நேரத்தில் ரயில் நிலையம் செல்ல முடியாமல், ரயிலை தவற விடுவதும் நிகழ்கிறது. எனவே, ரயில் நிலைய சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை, கீழ்முதலம்பேடு ஊராட்சி நிர்வாகமும், கவரைப்பேட்டை போலீசாரும் இணைந்து அகற்ற வேண்டும். சாலையை விரிவாக்கம் செய்ய கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணியர் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
09-Sep-2025