நெடுஞ்சாலையில் லாரிகள் மோதல் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திருவள்ளூர்:திருவள்ளூர் - திருத்தணி நெடுஞ் சாலையில் லாரிகள் மோதிய விபத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கும்மிடிபூண்டியில் இருந்து அரக்கோணம் எம்.ஆர்.எப். நிறுவனத்திற்கு கார்பன் துகள்கள் ஏற்றிக்கொண்டு கனரக லாரி நேற்று காலை 7:00 மணியளவில், சென்று கொண்டிருந்தது. திருவள்ளூர் அடுத்த சிறுவானுார் அருகே திருத்தணி நெடுஞ்சாலையில் லாரி சென்ற போது, எதிரே திருத்தணியில் இருந்து சென்னை வந்த சிமென்ட் ஏற்றிய லாரி, மோதியது. இதில், சிமென்ட் லாரி ஓட்டுநர் குருமூர்த்தி, 56 படுகாயமடைந்தார். தகவலறிந்த திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் வந்து அவரை மீட்டு திருவள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர். திருவள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.