வடமாநிலத்தில் இருந்து, 21கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது
மீஞ்சூர்:வடமாநிலத்தில் இருந்த, 7.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 21 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த இருவரை மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கைது செய்தனர். ஆந்திரா மற்றும் வடமாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதை தடுக்கும் வகையில், செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று, இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில், எஸ்.ஐ., விஜயகுமார், தலைமை காவலர் சம்பந்தம் ஆகியோர் சோழவரம் டோல்கேட் அருகே உள்ள சோதனை சாவடி பகுதியில் கண்காணிப்பு பணியில், ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு, சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த, இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததால், அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தனர். அதில், கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிந்தது. தொடர் விசாரணையில், அவர்கள், சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த அழகர்சாமி, 27, சென்னை அம்பத்துாரை சேர்ந்த பாரதி, 26, என்பதும் வடமாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 7.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 21கிலோ கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.