திருத்தணி முருகன் கோவிலில் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருத்தணி:முருகன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், பொது வழியில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். திருத்தணி முருகன் கோவிலில் நேற்று வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால், மூலவரை தரிசிக்க, மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். சில பக்தர்கள் மொட்டை அடித்து, காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். பொது வழியில் இரண்டு மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். சிறப்பு தரிசனத்திற்கு டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஒரு மணி நேரம் காத்திருந்து தரிசித்தனர். முன்னதாக, அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகர் வள்ளி, தெய்வானையுடன் தங்கத் தேரில் எழுந்தருளி, தேர்வீதியில் வலந்த வந்தார்.