தேவசேனாபுரம் ஏரியில் கொட்டப்படும் கழிவுகள் குடிநீர் மாசுப்படும் அபாயம்
திருத்தணி : திருத்தணி ஒன்றியம், கார்த்திகேயபுரம் ஊராட்சி, வள்ளியம்மாபுரம் பகுதி, புதிய பைபாஸ் சாலையோரம், இரண்டு அரசு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.அந்த கடைகள் அருகே தேவசேனாபுரம் ஏரி, 85 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரியை திருத்தணி ஒன்றிய நிர்வாகம் பராமரித்து வருகிறது.இந்த ஏரியில் தண்ணீர் இருந்தால் திருத்தணி நகராட்சிக்குட்பட்ட சேகர்வர்மா நகர், எம்.ஜி.ஆர்.நகர் மற்றும் வள்ளியம்மாபுரம் ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும்.மேலும் ஏரி பகுதியில் இருந்து ஆழ்துளை கிணறுகள் வாயிலாக ஊராட்சி மற்றும் நகராட்சிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.இந்நிலையில் டாஸ்மாக் கடைக்கு வரும் மதுபிரியர்கள், மதுபாட்டில்கள் வாங்கிக் கொண்டு ஏரிப்பகுதியில் ஆங்காங்கே அமர்ந்து குடித்துவிட்டு, மதுபாட்டில்கள் மற்றும் திண்பண்டங்களின் கழிவுகளையும் ஏரியில் வீசிவிட்டு செல்கின்றனர்.இதுதவிர டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபாட்டில்களின் அட்டை பெட்டிகள் மற்றும் மதுபாட்டில்களின் கவர்களையும் அங்குள்ள ஊழியர்கள் ஏரியில் கொட்டிவிட்டு செல்கின்றனர். தொடர்ந்து மதுபாட்டில்கள் மற்றும் கழிவுகளை கொட்டுவதால் ஏரியில் உள்ள தண்ணீர் மாசுப்படும் அபாயம் உள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, ஏரியில் மதுக்கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.