பூண்டியில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்
ஊத்துக்கோட்டை:பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கத்தில் இருந்து, புழலுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு உள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில், பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கம் முக்கியமானது. கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி, ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர், பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது. இங்குள்ள இணைப்பு கால்வாய் வாயிலாக, சென்னை புழல் மற்றும் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் சென்று கொண்டு இருந்தது. நேற்று முன்தினம் முதல் சென்னை புழல் நீர்த்தேக்கத்திற்கு திறந்து விடப்பட்ட நீர் நிறுத்தப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு மட்டும் வினாடிக்கு, 400 கன அடி நீர் சென்று கொண்டு இருக்கிறது. கிருஷ்ணா நீர் வினாடிக்கு, 180 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. அங்குள்ள பேபி கால்வாய் வாயிலாக வினாடிக்கு, 30 கன அடி நீர் சோழவரம் ஏரிக்கு செல்கிறது.