உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பழவேற்காடு மீன் இறங்குதளத்தில் குப்பையை அகற்றுவது எப்போது?

பழவேற்காடு மீன் இறங்குதளத்தில் குப்பையை அகற்றுவது எப்போது?

பழவேற்காடு: பழவேற்காடு மீன் இறங்குதளம் பகுதியில் குப்பை, மீன்கழிவுகள் குவிந்து துர்நாற்றம் வீசும் நிலையில், இதற்கு நிரந்தர தீர்வு எப்போது கிடைக்கும் என, மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர். பழவேற்காடு ஏரியின் கரையில், மீன் இறங்குதளம் அமைந்துள்ளது. அதே வளாகத்தில் மீன் ஏலக்கூடம், மீன் விற்பனை மையம் ஆகியவையும் செயல்படுகிறது. இப்பகுதியில் மீன் கழிவுகள், குப்பை ஆகியவை குவிந்து , பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது. கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், சுற்றுலா பயணியர் முகம்சுளிப்பதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மீன் இறங்குதளம் வளாகத்தில் உள்ள கடைகள் மற்றும் மீன் விற்பனை செய்வோரிடம் இருந்து வரி மற்றும் வாடகை வசூலிக்கப்படும் நிலையில் , மீன்வளத் துறையினர் முறையாக பராமரிப்பு மேற்கொள்வதில்லை என, மீனவர்கள் அதிருப்தியில் உள்ளனர். குப்பை மற்றும் மீன் கழிவுகளால், மீன் இறங்குதள வளாகத்தின் ஒரு சில பகுதிகளை மீனவர்கள் பயன்படுத்த முடியாத நிலையும் உள்ளது. கழிவுகளை முறையாக அகற்றுவதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படாமல் உள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் நிலையில், மீன் இறங்குதளத்தில் குவிந்துள்ள பிளாஸ்டிக், ரப்பர் உள்ளிட்ட குப்பை, தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு, ஏரியில் கலந்து மாசடையும். எனவே, கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துவதற்கு மீன்வளத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை