வட்டார கல்வி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் எப்போது?
திருத்தணி:திருத்தணி, பழைய தர்மராஜா கோவில் அருகே, இயங்கி வந்த திருத்தணி வட்டார கல்வி அலுவலக கட்டடம் பழுதடைந்து இடித்து விழும் நிலையில் இருந்தது. 2022ல் அக்டோபர் முதல் திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆய்வக கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அங்கு போதிய இடவசதி இல்லாததால், 98 அரசு பள்ளிகளுக்கு தேவையான பாடபுத்தகங்கள் உள்பட அரசு சார்பில் வழங்கும் பொருட்கள் வைப்பதற்கு இடமில்லை.மேலும், ஆய்வகத்தில், வட்டார கல்வி அலுவலகம் இயங்கி வருவதால், மாணவர்கள் செய்முறை தேர்வு எழுதுவதில், சிக்கல் நிலவி வருகிறது.எனவே மாவட்ட நிர்வாகம் வட்டார கல்வி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.இது குறித்து வட்டார கல்வி அலுவலர் ஒருவர் கூறியதாவது: பழுதடைந்த வட்டார கல்வி அலுவலகம் கட்டடத்தை இடித்து அங்கேயே புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் வருவாய் துறையினர் அந்த இடத்தை அளந்து, பள்ளி கல்வி துறையின் மீது பட்டா மாற்றம் செய்ய வேண்டும் என பல மாதங்களாக பரிந்துரை கடிதம் எழுதி வருகிறோம். வருவாய் துறையினர் அலட்சியத்தால் தான் புதிய கட்டடம் கட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.