கடனை செலுத்தாததால் வழக்கு பெண் தற்கொலை முயற்சி
அதிகத்துார்:தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டு கடன் வாங்கிய பெண் தற்கொலைக்கு முயன்று, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.கடம்பத்துார் ஒன்றியம், அதிகத்துார் மேட்டுக்கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி மகாலட்சுமி, 45. இவர் 2021ம் ஆண்டு சென்னையில் உள்ள அகம் ஹவுஸிங் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தில் 9 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வாங்கியுள்ளார்.கணவருக்கு உடல்நிலை சரியில்லாததால், கடனை முறையாக செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.இதையடுத்து நிதி நிறுவனம் சார்பில், திருவள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு பெற்றுள்ளனர்.இதனால் மன உளைச்சல் அடைந்த மகாலட்சுமி நேற்று முன்தினம் இரவு கையை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.மணவாள நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.