ஐம்பொன் சிலை எனக்கூறி மோசடி செய்தவர் சிக்கினார்
திருவாரூர்: சாமி சிலைகளை, ஐம்பொன் சிலைகள் எனக்கூறி விற்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம், பழவனக்குடியை சேர்ந்தவர், தமிழரசன், 40. இவர், தஞ்சை மாவட்டம், சுவாமி மலையில் தயாரிக்கப்பட்ட நடராஜர், சிவகாமி உலோக சிலைகளை, 75,000 ரூபாய்க்கு வாங்கி, மண்ணில் புதைத்து வைத்தார். இந்த சிலைகள், ஐம்பொன், பஞ்சலோகத்தால் ஆனது என, பொய்யாக கூறி, நண்பர்கள், தெரிந்தவர்களுக்கு, மொபைல் போனில் தகவல் அனுப்பினார். மேலும், தொல்பொருள் சிறப்பு மிக்க பழமையான சிலைகள் என, ஏமாற்றும் வகையில், பூமிக்குள் புதைத்தும், சிலைகளுக்கு ரசாயன கலர் பூசியும், பல லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்றார். தகவல் அறிந்த, திருவாரூர் டவுன் போலீசார் நேற்று, தமிழரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.