ஏரல்: ஏரல் அருகே சக்கம்மாள்புரத்தில் பெரிய அளவில் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை போலீசார் சுற்றிவளைத்து கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து 5 லட்சத்து32 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்துபோலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:ஏரல் அருகே நீண்டநாட்களாக பெரியளவில் சீட்டு கட்டு வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக ஏரல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த சூதாட்டத்தில் பல மாவட்டங்களில் இருந்து பலர் சீட்டு விளையாடி வருவதாக தெரிந்தது.
இதையடுத்து ஏரல் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் ஏரல் அருகே சக்கம்மாள்புரம் வாட்டர்டேங் முள் காட்டில் ஒரு கும்பல் இரவில் சீட்டு விளையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்இன்ஸ்பெக்டர் பால் ஐசக் மறறும் ஏட்டுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கும்பலை சுற்றிவளைத்தனர். இதில் உமரிக்காடு ராமஜெயம் மகள் ஆத்தாங்கரையான்(37), ஏரல் ஓடக்கரை தெருவைச் சேர்ந்த ராமநாதன் மகன் கணேசன்(35),உமரிக்காடு சங்கரன் மகன் ராஜேந்திரன்(51), வெள்ளூர் தெற்கு தெருவைச் சேர்ந்த சின்னதம்பி மகன் இலங்காமணி(32), திருச்செந்தூரைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் மகன் ஐயப்பன்(46),செய்துங்கநல்லூர் தென்னஞ்சோலை தெருவைச்சேர்ந்த முத்துராமலிங்கம்(45). வெள்ளூரைச் சேர்ந்த அப்பாத்துரை மகன் முருகன்(29), பரமன்குறிச்சியைச்சேர்ந்த பால்பாண்டி மகன் குணசேகர்(38), அதே ஊரைச்சேர்ந்த கணேசன் மகன் நாராயணன், வடசேரி தெற்குதெருவைச் சேர்ந்த மணி மகன் பாலன்(60), சுசிந்தரம் புலவிளை பாலையா மகன் புகழும் பெருமாள், கன்னியாகுமரி செல்லையா மகன் முருகன்(44). சாயர்புரம் லெட்சுமணன் மகன் ஜீவா(35), ஏரல் வீரபாகு மகன் சொரிமுத்து ஆகிய 14 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
இவர்களிடமிருந்து சூதாடிய பணம் 5லட்சத்து32 ஆயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்டு தப்பிஓடிய திருச்செந்தூரைச் சேர்ந்த தங்கவேல்(50) மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்த நாகராஜ்(30),திருநெல்வேலியைச் சேர்ந்த சூசை(50), தூத்துக்குடியைச் சேர்ந்த பாலமுருகன் ஆகிய நான்குபேரையும் போலீசார் தேடிவருகின்றனர்.பெரிய அளவில் நடைபெற்றுள்ள இந்த சூதாட்டத்தில் வேறு யாரும் சம்பந்தப்பட்டுள்ளனரா என்பது குறித்து டிஎஸ்பி.ஸ்டீபன்ஜேசுபாதம் விசாரணை நடத்திவருகிறார்.