போக்சோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் போக்சோ வழக்கில் கைதான முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.துாத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் காமராஜ்நகரை சேர்ந்தவர் சந்தியாவு, 70. இவர், அப்பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த 2021ல் கைதானவர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.வழக்கின் விசாரணை துாத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி சுரேஷ் குற்றம்சாட்டப்பட்ட சந்தியாவுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாய் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.