வலி நிவாரணி மாத்திரைகள் ரூ.60 லட்சம் மதிப்பில் சிக்கியது
துாத்துக்குடி,:துாத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு படகுகளில் சட்டவிரோதமாக பொருட்கள் கடத்தப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்ட போதிலும், ஆங்காங்கே சில இடங்களில் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு, நள்ளிரவு நேரத்தில் கடத்தப்பட்டு வருகின்றன.துாத்துக்குடி, திரேஸ்புரம் அண்ணா காலனி கடற்கரையில் கியூ பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு திடீரென ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஒரு படகில் இலங்கைக்கு கடத்த பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்த இருவர் போலீசாரை கண்டதும் தப்பியோடினர்.அங்கிருந்த, 10 மூட்டைகளில் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தன. அவற்றையும், படகையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக திரேஸ்புரத்தை சேர்ந்த ஜெனிஸ்டன், 20, அன்னை தெரசா காலனியைச் சேர்ந்த அனிஸ், 25, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.