தடைக்காலத்தில் அத்துமீறிய 16 கேரள மீனவர்கள் கைது
துாத்துக்குடி:மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், தமிழக கிழக்கு கடற்கரை பகுதியில் ஆண்டுதோறும் ஏப்., 15 முதல் ஜுன் 14 வரை, 61 நாட்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் வாயிலாக கடலில் மீன்பிடிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.இந்நிலையில், துாத்துக்குடியில் இருந்து கிழக்கே, 32 கடல் மைல் தொலைவில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு விசைப்படகு, கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் பகுதியை சேர்ந்த இரு நாட்டுப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த, 16 மீனவர்கள் மரைன் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களது படகுகள் கரைக்கு கொண்டு வரப்பட்டு, அதில் இருந்த, 1,842 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பொது ஏலத்தில் விடப்பட்டது. மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும்போது, கிழக்கு கடற்கரை பகுதியில் அத்துமீறி மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் இளம்பகவத் எச்சரித்துள்ளார்.