உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / ஆட்டோ டிரைவர் கொலையில் சிறார்கள் உட்பட 3 பேர் கைது

ஆட்டோ டிரைவர் கொலையில் சிறார்கள் உட்பட 3 பேர் கைது

துாத்துக்குடி:ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை செய்யப்பட்டதில் இரண்டு சிறார்கள் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இலுப்பையூரணி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மாரிசெல்வம், 31, என்பவர் சண்முகாநகர் சுடுகாட்டு பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்டார். கோவில்பட்டி கிழக்கு போலீசார் அவரது சடலத்தை மீட்டு, கொலையாளிகளை தேடி வந்தனர். இதற்கிடையே, கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி மாரிசெல்வத்தின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். மேலும், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், மாரிசெல்வம் கொலை தொடர்பாக இலுப்பையூரணியை சேர்ந்த முருகன், 51, மற்றும் 17 வயது சிறார் இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். போலீசார் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட மாரிசெல்வம் அப்பகுதியில் உள்ள சந்தன மாரியம்மன் கோவிலில் பூஜை செய்து வந்தார். இதுதொடர்பாக மாரிசெல்வத்திற்கும், முருகனுக்கும் இடையே சில நாட்களுக்கு முன் வாக்குவாதம் ஏற்பட்டது. கடந்த 3ம் தேதி இரவு முருகனின் 17 வயது மகன், ஆட்டோ டிரைவர் மாரிசெல்வத்தை சண்முகாநகர் சுடுகாட்டு பகுதிக்கு, சமரச பேச்சுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு சென்றதும் முருகனின் 17 வயது மகனும், அவரது நண்பரான 17வயது சிறுவனும் ஆட்டோ டிரைவர் மாரிசெல்வத்தை துரத்தி சென்று வெட்டி படுகொலை செய்து தப்பினர். தப்பியோடிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை