உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / 10ம் வகுப்பு மாணவர் தற்கொலை ஆசிரியைகள் 4 பேர் சஸ்பெண்ட்

10ம் வகுப்பு மாணவர் தற்கொலை ஆசிரியைகள் 4 பேர் சஸ்பெண்ட்

துாத்துக்குடி:திருச்செந்துார் அருகே, பத்தாம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தலைமையாசிரியர் உட்பட நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகே பரமன்குறிச்சி சமத்துவபுரத்தை சேர்ந்த முத்துக்குமார் -- திருமணி தம்பதியின் மூத்த மகன் முத்துகிருஷ்ணன், 15; பரமன்குறிச்சி கஸ்பாவில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.வீட்டுப்பாடம் எழுதாததால் பள்ளி தலைமையாசியை மற்றும் ஆசிரியைகள் சிலர் முத்துக்கிருஷ்ணணை கம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. வீட்டுக்கு சென்றதும், பெற்றோரிடம் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்புறமுள்ள கொட்டகையில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருச்செந்துார் போலீசார், முத்துகிருஷ்ணனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக துாத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் நடத்திய சோதனையில், முத்துக்கிருஷ்ணன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது.அதில், 'என் தற்கொலைக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சத்யா என்ற ஞானசுந்தரி, ஆசிரியைகள் பியூலா, எலிசபெத், வளர்மதி ஆகியோர் தான் காரணம்' என, குறிப்பிட்டுள்ளார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாணவரின் உறவினர்கள், வி.சி.க.,வினர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும், காட்டு நாயக்கர் சமூகத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணனுக்கு, பழங்குடியினர் இன ஜாதி சான்றிதழை ஆசிரியைகள் கேட்டு துன்புறுத்தியதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். மாவட்ட கல்வி அலுவலர் கண்ணன், பள்ளியில் நேரில் விசாரித்தார்.இதற்கிடையே, பள்ளி தலைமையாசிரியை மற்றும் ஆசிரியை என நான்கு பேரையும் சஸ்பெண்ட் செய்து, பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது. அதற்கான ஆணையை, மாவட்ட கல்வி அலுவலர் கண்ணனிடம், பள்ளி தாளாளர் பிரபாகரன் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை