கலப்பட டீசல் கடத்தியதாக தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு
துாத்துக்குடி:துாத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகளுக்கு பயன்படுத்தப்படும் டீசலுடன் சிலர், கலப்பட டீசலை சேர்த்து பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, தென்காசி, மதுரை பகுதிகளில் இருந்து, லாரிகளில் கலப்பட டீசல் கடத்தி வரப்படுகிறது.இந்நிலையில், மதுரையில் இருந்து துாத்துக்குடி மீன்பிடி துறைமுகத்துக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட, 8,800 லிட்டர் கலப்பட டீசலை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, நெல்லை மாவட்டம், பணகுடி அருகே ரோஸ்மியாபுரம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சுசில் பிரபாகர், 30, என்பவரை கைது செய்தனர்.விசாரணை நடத்திய குடிமை பொருள் கடத்தல் தடுப்பு போலீசார், கலப்பட டீசல் கடத்தியதாக தி.மு.க., மாநகர மீனவரணி அமைப்பாளரும், மாநகராட்சி கவுன்சிலரின் கணவருமான டேனியல், 47, அ.தி.மு.க., நிர்வாகிகள் மணி, 41, புல்டன், 43, உட்பட 13 பேர் மீது நேற்று வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.