துாத்துக்குடியில் சகோதரர்கள் கொன்று புதைப்பு போதை கும்பல் அட்டூழியம்; வழக்கம் போல போலீஸ் மறுப்பு
துாத்துக்குடி:கஞ்சா போதை கும்பலை தட்டிக்கேட்ட சகோதரர்கள் கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்ட சம்பவம் துாத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துாத்துக்குடி, கீழ பண்டுகரையை சேர்ந்தவர் மாரிபாண்டி, 41. இவரது தம்பி அருள்ராஜ், 32. ஜூலை 26ம் தேதி, அருள்ராஜ் காணாமல் போனதாக தெர்மல்நகர் காவல் நிலையத்தில், அவரது உறவினர்கள் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அருள்ராஜ், அவரது சகோதரர் மாரிபாண்டி அடித்து கொலை செய்யப்பட்டு, காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இருவரது உடலும், ஏ.எஸ்.பி., மதன் தலைமையில் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் நேற்று தோண்டி எடுக்கப்பட்டன. கீழபண்டுகரை பகுதியில் தினமும் மது, கஞ்சா போதையில் நடமாடி வந்த சிலரை மாரிபாண்டி, அருள்ராஜ் கண்டித்ததால், இருவரும் கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். அப்பகுதி மக்கள் கூறியதாவது: அருள்ராஜ் சில மாதங்களுக்கு முன் ஒரு விபத்தில் சிக்கியதால், இரு கண்களிலும் பார்வை குறைபாடு ஏற்பட்டது. கீழபண்டுகரை பகுதியில் மது குடித்துவிட்டும், கஞ்சா போதையிலும் ஏராளமான வாலிபர்கள் தினமும் அட்டூழியம் செய்து வருகின்றனர். அவர்களை தட்டிக்கேட்டதால் இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர். காவல் துறை தரப்பில் வெளியிட்ட அறிக்கை: இரட்டை கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ரிதன், 25, நேற்று கைது செய்யப்பட்டார். அவரது சகோதரர் காசிபாண்டி, சில மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு, உறவினர் களான மாரிபாண்டியும், அருள்ராஜும் தான் காரணம் என்பதால், அவர்களை கொலை செய்ததாக விசாரணையின் போது தெரிவித்துள்ளார். உறவினர்களுக்கு இடையே முன்விரோதம் காரணமாகவே கொலை நடந்துள்ளது. இறந்து போன நபர்கள், கஞ்சா குறித்து போலீசாருக்கு எந்தவித தகவல்களையும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.