வெள்ளத்தில் சிக்கியவரை துணிச்சலுடன் மீட்ட வாலிபர்கள்
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டத்தில் கடந்த, 11ம் தேதி முதல் தொடர்ந்து கனமழை பெய்கிறது. குறிப்பாக, கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலை, மணியாச்சி பகுதிகளில் பெய்த மழை காரணமாக, காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு உப்பாற்று ஓடையில் தண்ணீர் செல்கிறது. அப்பகுதியில் உள்ள சாலைகளை மூழ்கியபடி, ஓடையில் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.வெள்ளாலங்கோட்டை ஊருக்கு கிழக்கே உள்ள தரைபாலத்தை மூழ்கியபடி தண்ணீர் சென்றது. தனியார் காற்றாலை நிறுவனத்தில் பணியாற்றும் சீவலப்பேரி கிராமத்தை சேர்ந்த மனோஜ்குமார், 23, என்பவர், நேற்று முன்தினம் காரில் சென்றபோது, சிக்கினார். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட, 'மகிந்திரா பொலிரோ' கார் அங்கு இருந்த கருவேல மரங்களுக்கு இடையே சிக்கிக் கொண்டது. தண்ணீர் சூழ்ந்ததால் தப்பிக்க முடியாமல் திணறிய மனோஜ்குமார், காரின் மீது ஏறி நின்றபடி கூச்சலிட்டார்.இதை அறிந்த வடக்கு இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் சுப்புராஜ், 22, மகாராஜன், 23, மற்றும் சிலர், துணிச்சலாக, ஜே.சி.பி., இயந்திரத்தை அந்த பகுதிக்கு ஓட்டிச் சென்று, சீமை கருவேல மரங்களை அகற்றி, மழை வெள்ளத்தில் காருடன் சிக்கிக் கொண்டிருந்த மனோஜ்குமாரை கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர்.தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்களால் கார் மீட்கப்பட்டது.காட்டாற்றில் சிக்கிய மனோஜ்குமாரை துணிச்சலுடன் மீட்ட வாலிபர்கள் சுப்புராஜ், மகாராஜனுக்கு அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.