திருப்பூர் : ''வருவாய்த்துறையில் ஆட்கள் பற்றாக்குறையால் ஆய்வு பணி
தாமதமாகிறது,'' என திருப்பூர் ஆர்.டி.ஓ., செங்கோட்டையன் பேசினார். முத்தணம்பாளையம் ஊராட்சி, ரங்கேகவுண்டம்பாளையம், இந்திரா காலனியில் மனு
நீதி நாள் முகாம் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., செங்கோட்டையன், பொதுமக்களிடம்
மனுக்களை பெற்றார். ஊராட்சி தலைவர் பேபி வரவேற்றார். நலிந்தோர்
நலத்திட்டத்தின் கீழ் ஐந்து பேருக்கு தலா 12,500 ரூபாய் உதவித்தொகை
வழங்கப்பட்டது. குடிநீர் வசதி, ரோடு வசதி, கூடுதல் பஸ் வசதி, மின் இணைப்பு,
ரேஷன் கார்டு, பல்வேறு திட்டங்களின் கீழ் உதவித்தொகை, இறப்பு சான்றிதழ்
உள்ளிட்ட கோரிக்கைகளுடன் 150க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். ஊராட்சி
தலைவர் பேபி பேசுகையில், ''முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு
உதவித்தொகை கேட்டு ஏறத்தாழ 2,000 பேர் வரை இப்பகுதியில் இருந்து மனு
அளித்தனர். அதில் ஐந்து பேருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது
மிகவும் வேதனையாக உள்ளது. உண்மையான பயனாளிகளை தேர்வு செய்து, தகுதியான
அனைவருக்கும் வழங்க வேண்டும்,'' என்றார். ஆர்.டி.ஓ., செங்கோட்டையன்
பேசுகையில், ''அரசு பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் உதவித்தொகை வழங்குகிறது.
ஒரே நாளில் 500 எண்ணிக்கையிலான மனுக்கள் வருகின்றன. வசதியுள்ளவர்களும்
விண்ணப்பிக்கின்றனர். இதுகுறித்து முறையாக ஆய்வு நடத்திய பின்பே வழங்க
வேண்டும். ''வருவாய்த்துறையில் ஆட்கள் பற்றாக்குறையால் ஆய்வு பணி
தாமதமாகிறது. பொதுமக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில்,
மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். வறுமைக்கோட்டுக்கு கீழ்
உள்ளோர் குறித்த கணக்கெடுப்பு விரைவில் நடத்தி, தகுதியான நபர்கள்
சேர்க்கப்படுவர்,'' என்றார்.சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ஜாபர்
சாதிக், பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.