உடுமலை:கிராம இணைப்பு ரோட்டில் பாலாற்றின் குறுக்கே, தரை மட்டப்பாலம் அமைத்து தர வேண்டும் என, பொன்னாலம்மன் சோலை பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை அருகே தளி பேரூராட்சிக்குட்பட்ட பகுதி பொன்னாலம்மன்சோலை. மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில், மேடும், பள்ளமுமான பகுதிகளில், பல ஆயிரம் ஏக்கரில், அப்பகுதியில், விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது; மேலும், நுாற்றுக்கும் அதிகமான தோட்டத்துசாளைகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதி மக்கள், சாம்பல்மேடு, திருமூர்த்திநகர் வழியாக உடுமலைக்கு வருகின்றனர்; மற்றொரு வழித்தடமாக ஜிலோபநாயக்கன்பாளையம் வழியாக ஆனைமலை ரோடு வழியாகவும் பிற பகுதிகளுக்கு செல்கின்றனர். நீண்ட கால கோரிக்கை அடிப்படையில், சமீபத்தில், ரெட்டிபாளையம் பிரிவில் இருந்து, பொன்னாலம்மன்சோலைக்கு இணைப்பு ரோடு அமைக்கப்பட்டது.சுமார், 7 கி.மீ.,க்கும் அதிகமான துாரம் அமைந்துள்ள இந்த ரோடு வழியாக, நுாற்றுக்கணக்கான வாகனங்கள்நாள்தோறும் வந்து செல்கின்றன.மேலும், விவசாய விளைபொருட்களான தேங்காய், கொய்யா மற்றும் இதர காய்கறிகளை சந்தைப்படுத்த, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில், எடுத்துச்செல்கின்றனர்.இந்த ரோட்டில், பாலாறு குறுக்கிடுகிறது. ஆற்றை கடக்க அனைத்து வாகனங்களும் திணற வேண்டியுள்ளது. இருபுறமும், மிக சரிவாக அமைந்துள்ளதால், இரு சக்கர வாகன ஓட்டுநர்களும் அவ்வழியாக வர முடியாமல், தவிக்கின்றனர்.அப்பகுதி மக்கள் கூறியதாவது: பல்வேறு தேவைகளுக்காக எரிசனம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல ரெட்டிபாளையம் பிரிவு செல்லும் ரோடு உதவியாக உள்ளது. ஆனால், பாலாற்றை கடக்க எவ்வித வசதியும் இல்லை.தற்போது நீரோட்டம் குறைவாக இருப்பதால், இருசக்கர வாகனங்களை இறங்கி தள்ளிச்செல்ல வேண்டியுள்ளது.தற்காலிக தீர்வாக, பாலாற்றை கடந்து செல்லும் வகையில், தரைமட்ட பாலம் அமைத்து தர வேண்டும். இதனால், நுாற்றுக்கணக்கான விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்பெறுவார்கள். இவ்வாறு, தெரிவித்தனர்.