நிலக்கடலை மகசூல் அதிகரிக்க 50 இடத்தில் செயல்விளக்க திடல்
திருப்பூர்:உடல் ஆரோக்கியத்துக்கு, அரிசி, தானியம், பயிறு வகைகளுடன், உணவில் சேர்க்கப்படும் எண்ணெய் வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மத்திய, மாநில அரசுகள், எண்ணெய் வித்து பயிரான நிலக்கடலை சாகுபடிக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் நிதி உதவி வழங்கிவருகின்றன. நிலக்கடலை செயல் விளக்க திடல்கள், விதை உற்பத்தி மற்றும் வினியோகம், நுண்ணுாட்டச்சத்துக்கள், அறுவடைக்குப்பின் செய்நேர்த்திக்கு மானியம் வழங்கப்படுகிறது.ஒரு எக்டர் பரப்பளவில் நிலக்கடலை செயல்விளக்க திடல் அமைப்பதற்கு, 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி, திருப்பூர், ஊத்துக்குளி வட்டாரங்களில், அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டத்தில், ஆண்டுதோறும் 24,710.54 ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுவருகிறது.அவிநாசி தாலுகாவில் தற்போது, 50 இடங்களில் செயல்விளக்க திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த திடல்களை, தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன், வேளாண் உதவி இயக்குனர் அன்பழகி, உதவி விதை அலுவலர் வெற்றிவேல், வேளாண் உதவி அலுவலர் தினேஷ் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.செயல்விளக்க திடல்களில், அதிக விளைச்சல் தரும் நிலக்கடலை ரகங்கள், விதை நேர்த்தி, கோடை உழவு, உயிர் உரங்கள் இடப்படுகின்றன. இதனால், நிலக்கடலை விளைச்சல் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.