உடுமலை: ரயில்வே சுரங்கப்பாதைகளின் இருபுறத்திலும், மேற்கூரை அமைக்கும் திட்டத்தை அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில்பாதை பணிகளின் போது, உடுமலை வட்டாரத்தில், பல்வேறு இடங்களில், ரயில்வே சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டன.கிராமங்களின் முக்கிய வழித்தடத்தில், அமைந்த இந்த சுரங்கப்பாதைகளில் மழை நீர் வெளியேற போதிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.இதனால், மழைக்காலத்தில், சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி, அவ்வழியாக இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.தற்போது பாலப்பம்பட்டி, மருள்பட்டி ரோடு, பெரியார் நகர், ராகல்பாவி இணைப்பு ரோடு உள்ளிட்ட பல இடங்களில், இப்பிரச்னை நிரந்தரமாக உள்ளது. முன்பு, சுரங்கப்பாதைகளின் அருகே மோட்டார் ரூம் அமைத்து, மழை நீரை வெளியேற்றி வந்தனர்.பின்னர் மோட்டார் பழுது உள்ளிட்ட காரணங்களால், மழை நீரை வெளியேற்றும் பணியை கைவிட்டனர். தற்போது பரவலாக கோடை மழை பெய்து வரும் நிலையில், சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.பல வாரங்களுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.இதே அகல ரயில்பாதை வழித்தடத்தில், அந்தியூரிலிருந்து செல்லும் கிராம இணைப்பு ரோட்டிலுள்ள, சுரங்கப்பாதை ஓடுதளத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டு வருகிறது.பாலத்தின் இருபுறங்களிலும் குறிப்பிட்ட தொலைவுக்கு மேற்கூரை அமைப்பதால், மழை நீர் பாலத்தில் சென்று தேங்காது. இத்திட்டத்தை அனைத்து சுரங்கப்பாதைகளிலும் செயல்படுத்த ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.