| ADDED : ஜூலை 17, 2024 08:37 PM
திருப்பூரிலும் அரசு அச்சக கிளை அமைக்க இடம் தேர்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.தமிழக எழுது பொருள் மற்றும் அச்சுத்துறையின் கட்டுப்பாட்டில், மாநிலம் முழுவதும் எட்டு அரசு அச்சகங்கள் இயங்குகின்றன.இந்த அச்சகங்களில், அனைத்து அரசுத்துறை சார்ந்த பல்வேறு படிவங்கள், அறிக்கைகள், பதிவேடுகள், தேர்தல் படிவங்கள், பதிவேடு, கையேடுகள், ஓட்டுச்சீட்டு, கருவூல படிவங்கள் அச்சிடப்படுகின்றன.திருப்பூரிலும் அரசு அச்சக கிளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இடம் தேர்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை கமிஷனர் ஷோபனா திருப்பூருக்கு வந்தார்.கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் அச்சுத்துறை கமிஷனர் ஆகியோர், அரசு அச்சகம் அமைப்பதற்காக பல்வேறு இடங்களை பார்வையிட்டனர்.புஷ்பா ரவுண்டானா அருகே கூட்டுறவு பண்டக சாலைக்கு சொந்தமான கட்டடம், குமார் நகரில் காதிகிராப்டுக்கு சொந்தமான கட்டடம்; மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே, ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம் ஆகிய பகுதிகளை அச்சுத்துறை கமிஷனர் பார்வையிட்டு சென்றுள்ளார்.- நமது நிருபர் -