வீண் பழி, அவமானங்கள் துாக்கி எறிந்து முன்னேறுகிறேன்
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை:ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து, கல்வியினாலேயே இன்று இத்தகைய உயர் நிலையை எட்டிப்பிடித்துள்ளேன். குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, பணியிடத்தில் எத்தகைய இன்னல்களையும் சமாளித்து பெண்கள் பணிபுரிகின்றனர். பெண்களிடம் கடின உழைப்பு, நேர்மையோடு கூடவே, எதிலும் கருணையும் கலந்தே இருக்கும். ஆண்கள், உடல் வலிமை மிக்கவர்களாக இருக்கலாம். மன வலிமை மிக்கவர்கள் பெண்கள்.ஆபத்தானது, சவால் நிறைந்தது என ஒதுக்கிவிடாமல், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலரான நான், இரவு நேரங்களிலும் தைரியமாக ரெய்டு நடத்திவருகிறேன்; தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வோரை, தரமற்ற உணவுப்பொருள் விற்பனையாளர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்துவருகிறேன். பெண் என்பதால் வீண் பழி, அவமானங்கள் சுமத்தப்படுகின்றன. அவற்றையெல்லாம் துாக்கி எறிந்துவிட்டு முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். பெண்கள் கல்வி அறிவு பெறுவது மிகவும் அவசியம். எதற்காகவும் தளராமல், போராடினால் வெற்றி பெறலாம்.