திருப்பூர்:தோராய பட்டாவில் உள்ள சொத்துக்களுக்கு சொத்துரிமை சான்று வழங்கி, பரிவர்த்தனை செய்ய, மாவட்ட நிர்வாகம் வழிவகுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகம் முழுவதும், மசூதிகளுக்கு சொந்தமான சொத்துக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கணக்கெடுக்கப்பட்டது. வக்பு வாரியம் சார்பில், சொத்தின் மீது எவ்வித பரிவர்த்தனையும் செய்யக்கூடாது என, சார் பதிவாளர்களுக்கு நேரடியாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இது குறித்து கலெக்டர்களிடம் எவ்வித அனுமதியும் பெறவே இல்லை.இதனால், நத்தம் பட்டா நிலம், கூட்டு பட்டா நிலங்களில் உள்ள சொத்துக்களை பரிவர்த்தனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இரண்டு ஆண்டுகளாக, நில உரிமையாளர்கள் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றனர்.வக்பு வாரியம், மசூதிகளுக்கு சொந்தமான சொத்து விவரத்தை, முழுமையாகவும், முறையாகவும் அறிவிக்கவில்லை. உதாரணமாக கிராம நத்தம் நிலத்தில், தோராய பட்டா பெற்று, பொதுமக்கள், 30 ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் சொத்துக்கள் மீதும் தடையை ஏற்படுத்தியுள்ளது.நத்தம் நிலத்தை பொறுத்தவரை, மூன்று வகையான க.ச., எண்கள் உள்ளன. குறிப்பாக, 1992-94 வரையிலான காலத்தில் தான், புதிய தோராய பட்டா வழங்கி, புதிய க.ச., எண் வழங்கப்பட்டது. சொத்து பரிவர்த்தனையில், பழைய மற்றும் புதிய க.ச., எண்ணை குறிப்பிட்டு, பத்திரம் தயாரித்து வருகின்றனர்.அரசு வழங்கிய தோராய பட்டாவிலும், பழைய மற்றும் புதிய க.ச., எண்கள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், வக்பு வாரியம் அனுப்பிய கடிதத்தில், மங்கலம் மசூதிகளுக்கு சொந்தமான சொத்தின் பழைய எண்ணை மட்டும் குறிப்பிட்டது; புதிய எண்ணை குறிப்பிட வில்லை.அக்ரஹாரப்புத்துார் ஊர்க்கட்டு நத்தத்தில், கடந்த, 1992ம் ஆண்டு வரை, ஊர் முழுமைக்கும் ஒரே க.ச., எண் பயன்பாட்டில் இருந்துள்ளது. அதற்கு பின்னரே, தனித்தனி பட்டா வழங்கியுள்ளனர். வக்பு வாரியம், பழைய க.ச., எண்ணை குறிப்பிட்டதால், ஒட்டுமொத்த கிராம மக்கள், எவ்வித சொத்து பரிவர்த்தனையும் செய்ய முடியாமல், இரண்டு ஆண்டுகளாக பரிதவித்து வருகின்றனர். இதில், வாரிசு ரீதியாகவும், கிரயம் வாயிலாகவும் பலமுறை பத்திரப்பதிவு நடந்த சொத்துக்களையும் முடக்கியுள்ளது பலரையும் பாதித்துள்ளது. மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் முறையிட்டு, வருவாய்த்துறை பதிவேடு அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது.மங்கலம் பகுதி மட்டுமல்ல, அவிநாசி உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இதே நிலைதான் உள்ளது. மசூதிகளின் சொத்துக்களை கண்டறிந்து, அதன்மீது மட்டும் தடைவிதிக்க வேண்டும்;ஒட்டுமொத்த கிராம சொத்துக்கள் மீது பரிவர்த்தனை தடை செய்யக்கூடாது. விரைவில், மசூதியின் சொத்துக்களை மட்டும் குறிப்பிட்டு, மற்ற சொத்துக்கள் மீதான தடையை நீக்க வேண்டும் என, கலெக்டர் கடிதம் அனுப்பியிருந்தார். அதன் பின்னரும், வக்பு வாரியம் நடவடிக்கை இல்லை. இப்பிரச்னை எளிய முறையில், மாவட்ட நிர்வாகமே தீர்வு வழங்க முடியும் என, பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.மங்கலம் பகுதி மட்டுமல்ல, அவிநாசி உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இதே நிலை தான். மசூதிகளின் சொத்துக்களை கண்டறிந்து, அதன்மீது மட்டும் தடைவிதிக்க வேண்டும்; ஒட்டுமொத்த கிராம சொத்துக்கள் மீது பரிவர்த்தனை தடை செய்யக்கூடாது
கலெக்டர் உத்தரவிடலாம்!
தமிழக அரசு வழங்கியுள்ள தோராய பட்டா மற்றும் வருவாய்த்துறை பதிவேடுகள் அடிப்படையில், தோராய பட்டா பெற்ற உரிமையாளர் அல்லது வாரிசுதாரர்களுக்கு, வருவாய்த்துறை மூலமாக, சொத்துரிமை சான்று வழங்கலாம். நத்தம் நிலத்துக்கும், 'ஆன்லைன்' சிட்டா வழங்கும் நடைமுறையை அனைத்து தாலுகாவுக்கும் அமல்படுத்தலாம். சொத்துரிமை சான்று, கம்ப்யூட்டர் சிட்டா சம்பந்தப்பட்ட பரப்பளவுள்ள நிலம், தனி நபருக்கு சொந்தம்; மசூதிக்கு சொந்தமானது அல்ல என்பதை ஊர்ஜிதம் செய்து, சொத்து பரிவர்த்தனைக்கு, சார்பதிவாளர் அனுமதிக்க வேண்டுமென, கலெக்டர் உத்தரவிட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, தமிழக அரசு ஏழைகளுக்கு வழங்கிய தோராய பட்டாவுக்கு உரிய மதிப்பு இருக்கும், என்கின்றனர் பொதுமக்கள்.