| ADDED : ஜூலை 07, 2024 11:02 PM
திருப்பூர்:திருப்பூர் நகைச்சுவை அரங்கம் சார்பில், 'சி(ரிறப்பு விழா' நகைச்சுவை சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று நடந்தது.திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு,, வனம் பவுண்டேஷன் செயலாளர் சுந்தரர்ராஜன் தலைமை வகித்தார். அறங்காவலர் உத்தமன், செயலாளர் பூபதிராஜன், தொகுப்பாளர் நாராயணன், முரளி முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், 'மனமது செம்மையானால்' என்ற தலைப்பில், உலக சமுதாய சேவா சங்க பேராசிரியர் சுமதி சீனிவாசன் பேசினார்.'மனதைத் திற' என்ற தலைப்பில், மதுரை முத்து பேசியதாவது:ஆன்மிகம் அதிகம் உள்ள பகுதிகளில், குற்றம் குறையும்; நகைச்சுவை அதிகமாக இருந்தால், நோய்கள் குறையும். சிரிப்பவர்கள் அனைவரும் மிகச்சிறந்த அறிவாளிகள்.கோவிலில் பிரார்த்தனை செய்வது போல், மனம் விட்டு சிரித்தாலும் பலன் கிடைக்கும். வலுவான மரத்தை செல் அரித்து அழிப்பது போல், மனிதர்களை, 'செல்' போன்கள் அழித்துக்கொண்டிருக்கின்றன. பேசுவதற்காக கண்டறியப்பட்ட கைப்பேசி; இன்று யாரையும் பேச முடியாதபடி செய்துவிட்டது.நோயின்றி வாழ வேண்டுமெனில், ரசனையுடன் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டுமென, டாக்டர்கள் கூறுகின்றனர். மகிழ்ச்சி என்பது மனம் சார்ந்தது; பணம் சார்ந்தது அல்ல.உலகில் சிரித்து வாழ்பவர்களே கோடீஸ்வரர். மூன்று வினாடிகளில் மனிதனின் ஆரோக்யத்தை பரிசோதிக்க முடியும். காதில் கேட்டு, மூளையில் உள்வாங்கிமனதார சிரிக்க வேண்டும்; அவரே ஆரோக்கியமானவர்; சிரித்து வாழ வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.