உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விற்பனை கூடத்தில் மக்காச்சோளம் ஏலம்; ஒரு மாதத்தில் ஆயிரம் டன் விற்பனை

விற்பனை கூடத்தில் மக்காச்சோளம் ஏலம்; ஒரு மாதத்தில் ஆயிரம் டன் விற்பனை

உடுமலை; உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், கடந்த ஒரு மாதத்தில், ஆயிரம் டன் மக்காச்சோளம் இ - நாம் திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்பட்டுள்ளது.உடுமலை பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந்துள்ளது. விவசாயிகள் அறுவடை செய்யும் மக்காச்சோளத்தை, உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு, உலர் களங்களில் காய வைத்து விற்பனைக்கு தயார் செய்கின்றனர்.இதனால், இக்கூடத்திற்கு இதன் வரத்து அதிகரித்துள்ள நிலையில், தினமும் இ - நாம் திட்டத்தில் ஏலம் நடந்து வருகிறது.கடந்த, ஒரு மாதத்தில், இ - நாம் திட்டத்தின் கீழ் நடந்த மக்காச்சோளம் ஏலத்திற்கு, உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களிலிருந்து, 161 விவசாயிகள், 1009.42 டன் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.ஒரு குவிண்டால், ரூ.2,300 முதல், ரூ.2,450 வரை ஏலம் போனது. இதன் மொத்த மதிப்பு, 2 கோடியே, 43 லட்சத்து, 5 ஆயிரத்து, 855 ரூபாயாகும்.திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் தர்மராஜ், ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் கூறுகையில், '' உடுமலை சுற்றுப்பகுதிகளில், மக்காச்சோளம் அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், விவசாயிகள் அறுவடை விளை பொருட்களை, உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திலுள்ள உலர் களங்களுக்கு கொண்டு வந்து, காய வைக்கின்றனர். இங்கு இ - நாம் திட்டத்தின் கீழ் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். மேலும் விபரங்களுக்கு, 94439 62834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், '' என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ