உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிநீரில் கலந்து வரும் கழிவுநீர்; மாதக்கணக்கில் தொடரும் அவலம்

குடிநீரில் கலந்து வரும் கழிவுநீர்; மாதக்கணக்கில் தொடரும் அவலம்

திருப்பூர்; பிச்சம்பாளையம் பகுதியில் ஒரு வீதி முழுவதும் வீட்டு குழாய் இணைப்பில் கழிவு நீர் கலந்து வருகிறது. மாதக்கணக்கில் இது சரி செய்யப்படாமல் குடியிருப்புவாசிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.திருப்பூர் மாநகராட்சி, 22வது வார்டுக்கு உட்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறத்தில் பிச்சம்பாளையம் விரிவு பகுதி உள்ளது. இதில், 4வது வீதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு, குமார் நகர் மேல்நிலைத் தொட்டியிலிருந்து வாரம் ஒரு நாள், 2 மணி நேரம் என்ற அளவில் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்த இணைப்புகளில் தற்போது குடிநீரில், கழிவு நீர் கலந்து வருகிறது. கருமை நிறத்தில், துாசி மற்றும் புழுக்களுடன் குடிநீர் வருகிறது. கடும் துர்நாற்றமும் வீசுகிறது.அப்பகுதியினர் கூறியதாவது:குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனை சப்ளை செய்ய வேண்டாம் என்று கூறியும் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து சப்ளை செய்கின்றனர். தொட்டி மற்றும் வீட்டினுள் இதனால் கடும் நாற்றம் வீசுகிறது.குழாயில் வரும் நீரை பயன்படுத்த முடியாமல் வீணாகி வருகிறது. கழிவுநீர் கலப்பது குறித்து கடந்த, 3 மாதமாக தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறோம். அடுத்த வீதிக்குச் சென்று தான் குடிநீர் பிடித்துக் கொண்டு வந்து பயன்படுத்துகிறோம்.இது குறித்து புகார் அளித்து குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் வந்து சில இடங்களில் குழி தோண்டிப் பார்த்தனர். எந்தப்பயனும் இல்லை. இப்பிரச்னைக்கு ஒரு முடிவு கிடைக்காமல், போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ