உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை பணிகள் மீண்டும் தீவிரம்

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை பணிகள் மீண்டும் தீவிரம்

உடுமலை,; அரசுப்பள்ளிகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்துவதற்கும், மாணவர்களுக்கு நவீன முறையில் பாடம் நடத்துவதற்கும், நிகழ்கால எடுத்துக்காட்டுகளுடன் கற்றல் விளைவுகளை கற்பிப்பதற்கும், ஸ்மார்ட் வகுப்பறை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.துவக்கப்பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டுகள் அமைக்கப்பட்டு பாடம் நடத்துவதற்கும், நடுநிலை பள்ளிகளில் உயர்தர கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் நடப்பாண்டில் அமைக்கப்படும் என, அரசு அறிவித்தது.குறிப்பிட்ட சில மாவட்டங்களில், அதற்கான பணிகள் முழுமையாக நிறைவு பெற்று, அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில், இதற்கான பணிகள் கடந்த கல்வியாண்டின் இறுதியில் துவக்கப்பட்டது.முதற்கட்டமாக ஸ்மார்ட் வகுப்பறை அமைப்பதற்கான இணைய வசதி வழங்கப்பட்டது. அடுத்து இடத்தேர்வு, அதற்கான வகுப்பறை சூழலை மாற்றுவது, இணை உபகரணங்கள் பள்ளிக்கு வழங்கப்படுவதென, கல்வியாண்டின் துவக்கத்தில் தொடர்ந்து விறுவிறுப்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டது.ஆனால் அதன் பின், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.தற்போது மீண்டும் ஸ்மார்ட் போர்டுகள் பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரத்துக்குட்பட்ட அரசு துவக்கப்பள்ளிகளிலும், ஸ்மார்ட் போர்டுகள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.வட்டார கல்வி அலுவலர்கள் கூறியதாவது:பணிகள் ஒவ்வொரு கட்டமாக மட்டுமே மேற்கொள்ள முடியும். ஒரு வட்டாரத்துக்கு மாணவர் எண்ணிக்கை அதிகமுள்ள துவக்க பள்ளிகளுக்கு, முதற்கட்டமாக ஸ்மார்ட் போர்டுகள் அனுப்பப்பட்டுள்ளது.தொழில்நுட்ப குழுவினர் அப்பள்ளிகளில் நேரடியாக பார்வையிட்டு, போர்டுகளை செயல்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்வர்.அதன் பின், அடுத்த கட்ட பள்ளிகளுக்கு அனுப்பப்படும். வரும் கல்வியாண்டில் இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வருமென எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ