இறைவன் பாதத்தில் சரண் அடையுங்கள்! ஆன்மிக நிகழ்ச்சியில் பேச்சு
உடுமலை:'இறைவன் பாதத்தில் சரண் அடைந்தால், அவர் நம்மை இறைநிலைக்கு மேல் ஏற்றுவார்,' என ஆன்மிக சொற்பொழிவாளர் பேசினார்.உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.உடுமலை ஆன்மிக பேரவை சார்பில் நடந்த சொற்பொழிவில், 'கற்பக களிறு' என்னும் தலைப்பில், ஆன்மிக பேச்சாளர் குருசுபாஷ்சந்திர போஸ் பேசியதாவது: 'ஓம்' என்னும் பிரணவமாக விநாயகர் விளங்குகிறார். பிள்ளையார் சுழி போட்டுதான், நாம் எழுத துவங்குகிறோம்.அதுபோல், எந்த தெய்வத்துக்கு, உரிய மந்திரமானாலும், 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தில், ஆரம்பித்து ஜபம் செய்வது முறையாகும்.யானை மீது ஏற பாகன், அதன் காலை தொடுகிறார். உடனே யானையானது உட்கார்ந்து, அவரை தன் மேலே ஏற அனுமதிக்கிறது.அதே போல விநாயகர் பாதத்தில், சரண் அடைந்தால், அவர் துதிக்கையாலே நம்மை இறைநிலைக்கு மேல் ஏற்றுவார் என்பது நிதர்சனமான உண்மையாகும்.கேட்டதை தருகிற கற்பக மரம் போன்றவர் விநாயகர். எனவே தான் அவ்வையார் விநாயகர் அகவலில், 'கற்பக களிரே' என்று பாடினார். மனம் உருகி பிரார்த்தனை செய்தால், பக்தர்கள் முன் பிரசன்னமாவார் என்பதால்தான் பிரசன்ன விநாயகர் என போற்றப்படுகிறார்.இவ்வாறு, பேசினார்.உடுமலை ஆன்மிக பேரவை சார்பில், சிவசண்முகம், திருவாவடுதுறை ஆதின புலவர் கமலம், ராமசுப்பிரமணியம் மற்றும் பேரவை உறுப்பினர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.