விபத்தின் வலி உணர்வோம் விதிமுறை மீற மாட்டோம்
அழுக்குப்படிந்த ஆடை, குளித்து பல நாட்கள் கடந்த தேகம், பரட்டை தலை... இப்படி சோகத்தின் மொத்த உருவாக, மனநலம் பாதிக்கப்பட்ட கோலத்தில், குழந்தை பொம்மையை வைத்தபடி, திருப்பூரின் 'பிஸி'யான ரோட்டில் அங்குமிங்கும் சுற்றித்திரிந்து கொண்டிருக்கிறார், ஒருவர்.தங்கள் பயணத்தின் நடுவே, சிலர் அனுதாப பார்வையுடனும், சிலர் வெறுப்பு பார்வையுடனும் அவரை கடந்து செல்கின்றனர். திடீரென சாலையோரம் ஒரு சப்தம், டூவீலரில் குடும்பமாக வந்தவர்கள், எதிரே வந்த வாகனத்தின் மீது மோத, நிலைக்குலைந்து சாலையில் சரிகின்றனர். ரத்தம் ஆறாய் ஓடுகிறது. இதனை பார்த்து தலைவிரி கோலத்தில் வருகிறார், அந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்.''நான் அப்பவே சொன்னேன்ல, ெஹல்மெட் போட்டுட்டு போ...ன்னு, கேட்டியா? மொபைல் போன்ல பேசிக்கிட்டே வண்டி ஓட்டாதேன்னு, கேட்டியா?'' கதறுகிறார் அந்த நபர். மனதை உலுக்கும் இந்த காட்சி, கூடியிருந்த சிலரின் கண்களை குளமாக்கியது. சாலையில் சிதறிய ரத்தத்தை கண்டு, பெண்கள் சிலர் மயக்கமடைந்தனர்.''மன நலம் பாதிக்கப்பட்டவர், குழந்தை, குடும்பத்துடன் காரை ஓட்டும் போகும் போது, மொபைல் போன்ல பேசிட்டே போயிருக்கார். கவனக்குறைவால விபத்து ஏற்பட்டு குடும்பத்தை இழந்துட்டார். அந்த சோகம் தான் அவரை இந்த நிலைமைக்கு ஆளாகிடுச்சு,'' என, அங்கிருந்த ஒருவர் கூறினர்.விபத்தின் வலியை உணரத்துவங்கிய வாகன ஓட்டிகளின் மனம், 'இனி, மெதுவா வண்டி ஓட்டணும்; டூவீலரில் போறப்ப ெஹல்மெட் போட்டுக்கணும். கார்ல போறப்போ 'சீட் பெல்ட்' போடணும்,' என்ற உறுதிமொழியை தானாகவே எடுத்துக் கொண்டது.
குடும்பம் காத்திருக்கிறது
திரைப்பட கல்லுாரி மாணவர்கள் தான் கூத்துப்பட்டறையில், கலைஞர்களாக உள்ளனர். மக்களின் மனதை உலுக்கும், உருக்கும் கதையுடன் கூடிய தத்ரூப நாடகம், வாகன ஓட்டிகள் சிலரை கண்ணீர் சிந்த வைக்கிறது. சிந்திக்க வைக்கிறது. சினிமாவில் உருக்கும் கதை, இசையின் பின்னணியில் மக்களை கண் கலங்க செய்யும்; நங்கள் இரைச்சலுக்கு இடையே, நடிப்பின் வாயிலாக மக்களை கண்கலங்க செய்கிறோம். எங்கள் நாடகம், வாகன ஒட்டிகளை சிந்திக்க செய்கிறது; மெதுவாக பயணிக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. தங்களின் வேகத்தை குறைத்தும், தங்களை நம்பி ஒரு குடும்பம் உள்ளது என்ற உணர்வுடன், விபத்தில்லாமல் வாகனத்தை ஓட்டினாலே விபத்துகள் குறையும்.- முத்துசாமிகூத்துப்பட்டறை பயிற்சியாளர்