ஆதார் மையங்கள் முடங்கியது! சாப்ட்வேர் அப்டேட்டில் கோளாறு: பொதுமக்கள் அவதி
திருப்பூர்; சாப்ட்வேர் கோளாறு காரணமாக, திருப்பூர் மாவட்டத்தில், அரசு கேபிள் டிவி நிறுவன கட்டுப்பாட்டிலுள்ள பத்து ஆதார் மையங்களும், கடந்த ஐந்து நாட்களாக முடங்கியுள்ளது.தனிநபர் கைரேகை, கண் கருவிழி ஆகிய பயோமெட்ரிக் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, ஆதார் வழங்கப்படுகிறது. வங்கி கணக்கு துவங்க, ரேஷன் கார்டு பெறுவதற்கு, அரசு நலத்திட்ட உதவிகள், சலுகைகள் பெறுவது உள்பட பல்வேறு பயன்பாடுகளுக்கான பிரதான அடையாள ஆவணமாக, ஆதார் பயன்படுத்தப்படுகிறது.எல்காட் மற்றும் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம், தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவுலகங்களில், நிரந்தர ஆதார் மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. புதிய ஆதார் பதிவு, ஆதாரில் திருத்தங்கள் செய்ய பொதுமக்கள் இம்மையங்களை பயன்படுத்துகின்றனர்.அரசு கேபிள் டிவி நிறுவன கட்டுப்பாட்டில், அனைத்து தாலுகா அலுவலகங்களிலும், ஆதார் மையங்கள் இயங்கி வருகின்றன. அருகாமை காரணமாக, பெரும்பாலானோர், ஆதார் பதிவுக்கு, தாலுகா அலுவலக மையங்களையே நாடுகின்றனர்.இந்நிலையில், சாப்ட்வேர் கோளாறு காரணமாக, கடந்த, 4ம் தேதி முதல், தமிழகம் முழுவதும், அரசு கேபிள் டிவி நிறுவன ஆதார் மையங்களில் செயல்பாடுகள் முடங்கியுள்ளன.திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கயம், ஊத்துக்குளி, மடத்துக்குளம் தாலுகா அலுவலகங்களில் தலா ஒன்று; உடுமலை தாலுகா அலுவலகத்தில், 2 என, மொத்தம் 10 ஆதார் மையங்கள், அரசு கேபிள் டிவி நிறுவன கட்டுப்பாட்டின்கீழ் இயங்கிவருகின்றன. ஒவ்வொரு மையத்துக்கும், நாளொன்றுக்கு 40 முதல் 50 பேர் வீதம், மொத்தம் 400 முதல் 500 பேருக்கு ஆதார் பதிவு, திருத்தங்கள் செய்யப்படுகிறது.கடந்த ஐந்து நாட்களாக இம்மையங்கள் செயல்படாததால், பொதுமக்கள், மிகவும் சிரமப்படுகின்றனர். புதிய ஆதார் பதிவு, ஆதாரில் மொபைல் எண், முகவரி மாற்றங்களுக்காக தாலுகா அலுவலகங்களுக்கு வருவோர், மையம் செயல்படாததை அறிந்து, ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். குறிப்பாக, பயோமெட்ரிக் அப்டேட், திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ளமுடியாமல், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் தவிக்கின்றனர்.ஆதாரின் உடனடியாக திருத்தம் தேவைப்படுவோர், திருப்பூர் கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலக, ஆதார் மையங்களை நாடுகின்றனர். இதனால், அம்மையங்களில் வழக்கத்தைவிட பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
விரைவில் சரி செய்யப்படும்
ஆதார் பதிவுக்கான அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சாப்ட்வேர், அப்டேட் செய்யப்பட்டு, புதிய வெர்ஷனுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறுகளாலேயே, ஆதார் பதிவு பாதிக்கப்பட்டுள்ளது. பிரச்னைகளை சரி செய்யும் பணியில், தொழில்நுட்ப குழுவினர் வேகம்காட்டிவருகின்றனர். விரைவில் சரி செய்யப்பட்டு, ஆதார் மையங்கள் செயல்பாட்டை துவக்கும். ஆதார் மையங்களுக்கு வருவோரிடமிருந்து, மொபைல் எண் பெறப்படுகிறது. சாப்ட்வேர் பிரச்னை சரி செய்யப்பட்டவுடன், மொபைல் போனில் அழைத்து தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆதார் பதிவு செய்யப்படும்.- அரசு கேபிள் டிவி நிறுவன அதிகாரிகள்