உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஏஜன்ட்களிடம் படிவம் ஒப்படைக்க கூடாது: கலெக்டரிடம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் மனு 

ஏஜன்ட்களிடம் படிவம் ஒப்படைக்க கூடாது: கலெக்டரிடம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் மனு 

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடந்து வருகின்றன. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாக சென்று, வாக்காளருக்கு, தலா, 2 படிவங்களை வழங்கி வருகின்றனர். பூர்த்தி செய்த பின், ஒரு படிவத்தை திரும்ப பெற வேண்டும். பூர்த்தி செய்த படிவங்களை, அதிக பட்சம் 50 படிவங்கள் வரை, கட்சி ஏஜன்டுகள் வாயிலாகவும் ஒப்படைக்கலாம் என்று, தேர்தல் கமிஷனர் தெரிவித்துள்ளதாக கட்சியினர் கூறுகின்றனர். இதற்கு, அ.தி.மு.க., எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து, மாநகர் மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ.,கள் ஆனந்தன், ராதாகிருஷ்ணன், விஜய குமார், மகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.,கள் பரமசிவம், நடராஜன் மற்றும் கட்சியினர் கலெக்டர் மனிஷ் நாரணவரேவிடம் நேற்று மனு கொடுத்தனர். அதன்பின், மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது: அனைத்து வாக்காளருக்கும் வாக்களிக்கும் உரிமை விடுபட்டுவிடக்கூடாது என்பதற்காக, தேர்தல் கமிஷன் மூலம், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடந்து வருகிறது. இப்பணிக்கு, அ.தி.மு.க., சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. பி.எல்.ஓ.,க்கள் வீடு வீடாக சென்று படிவம் வழங்கி, மற்றொரு நாளில் அவர்களே திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும். அரசியல் கட்சி ஏஜன்டுகளும், 50 படிவம் வரை பெறலாம் என்று கூறுவதை ஏற்க முடியாது. கட்சி ஏஜன்டுகள், வாக்காளரின் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை பெற்று, கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைப்பது தவறான முன்னுதாரணம். தங்களுக்கு வேண்டிய வாக்காளர் பெயரை மட்டும் சேர்த்துவிட்டு; வேண்டாத வாக்காளர் பெயரை நீக்கவும் வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க, பி.எல்.ஓ., மூலம் மட்டுமே, பூர்த்தி செய்த படிவங்களை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை