மாணவர்களுக்கு திறனறித்தேர்வு; ஆன்லைன் பயிற்சி வகுப்பு துவக்கம்
உடுமலை : உடுமலை வட்டார அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில், தேசிய வருவாய் வழி திறனறித்தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பு துவங்கியது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, தேசிய வருவாய்வழி திறனறித்தேர்வு கல்வியாண்டு தோறும் நடத்தப்படுகிறது.இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, அவர்களின் மேல்நிலைப்படிப்பு முடியும் வரை மாதம்தோறும் உதவித்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், அதிகமான மாணவர்களை வெற்றி பெற செய்யவும், மாணவர்களின் திறன்களை வளர்க்கும் வகையிலும் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் பள்ளிகளில் நடத்தவும் பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.இதன் அடிப்படையில், பள்ளிகளில் ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உணவு இடைவேளை நேரத்தில் ஆன்லைன் வாயிலாக, இத்தேர்வுக்கான பயிற்சி வகுப்பு கல்வியாண்டுதோறும் நடத்தப்படுகிறது.நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வு, சில மாதங்களில் நடக்க உள்ளது. இத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில், உடுமலை வட்டாரத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டன.வட்டார கல்வி அலுவலர்கள் சரவணக்குமார், மனோகரன், ஆறுமுகம் பயிற்சியை துவக்கி வைத்தனர். துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த தலைமையாசிரியர்கள் ஆன்லைன் வாயிலாக, இப்பயிற்சி அளிக்கின்றனர்.மாணவர்கள் முழுமையாக இப்பயிற்சிகளை பயன்படுத்தி, தேர்ச்சி பெறும் வகையில் ஆசிரியர்கள் மாணவர்களை தயார்படுத்த வேண்டுமென, கல்வித்துறையின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.