உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அத்திக்கடவு திட்டம்; குறைகேட்பு கூட்டம் அவசியம்

அத்திக்கடவு திட்டம்; குறைகேட்பு கூட்டம் அவசியம்

திருப்பூர் : 'அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணி தொடர்பாக, மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட வேண்டும்' என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி, 1,916 கோடி ரூபாய் செலவில் அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. திட்டத்தின் கீழ், 3 மாவட்டங்களிலும், 1,046 குளம், குட்டைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, நீர் செறிவூட்டும் பணி நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்யும் மழைநீர், பவானி ஆற்றில் பெருக்கெடுக்கிறது.இந்த நீரை ஆதாரமாக கொண்டே, அத்திக்கடவு திட்டத்தின் கீழ் நீர் செறிவூட்டப்படும் நிலையில், கடந்த இரு ஆண்டாக நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது; சில சமயங்களில், மிக பலத்த மழையும் பெய்கிறது. இதனால், பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கால், அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தின் கீழ், நீர் செறிவூட்டும் பணியும் தடையின்றி நடந்து வருகிறது.

குழாய்களில்உடைப்பு - அடைப்பு

இருப்பினும், திட்டத்தின் கீழ் பொருத்தப்பட்டுள்ள குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு மற்றும் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் நீர் செறிவூட்டும் பணியில் தடங்கல் ஏற்படுகிறது என, அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கூறி வருகின்றனர். இதனால், ஒவ்வொரு நீரேற்று நிலையங்களிலும், முழுமையாக மோட்டார்களை இயக்க முடிவதில்லை எனவும் கூறப்படுகிறது.

கண்காணிப்பு அவசியம்

அவிநாசி வட்டார விவசாயிகள் கூறியதாவது:தற்போது, நீலகிரி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், பருவமழை, பரவலாக பெய்து வரும் நிலையில், அத்திக்கடவு திட்டத்தின் கீழ் நீர் செறிவூட்டும் பணியிலும் தொய்வு இருக்காது என கருதுகிறோம். திட்டத்தின் கீழ் குளம் குட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி சென்சார் கருவிகள் வாயிலாக, உரிய முறையில் நீர் செறிவூட்டப்பட்டிருக்கிறதா என்பதையும் அதிகாரிகள் அவ்வப்போது உறுதிப்படுத்த வேண்டும்.

கருத்து கேட்கப்படவேண்டும்

அத்திக்கடவு திட்டம் என்பது, அரசின் சிறப்பு நீர் மேலாண்மை திட்டம் என்ற அடிப்படையில், மாதம் ஒரு முறை மாவட்ட கலெக்டர் தலைமையில், இத்திட்டம் தொடர்பான குறைகேட்பு கூட்டம் நடத்தி, அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் அத்திக்கடவு ஆர்வலர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும். இதன் வாயிலாக, திட்டத்தில் தென்படும் குறைகளை அவ்வப்போது களையவும், திட்டத்தின் பலன் அனைத்து இடங்களுக்கும் சென்று சேர்வதை உறுதிப்படுத்தவும் முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி