உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விசைத்தறி கூலி பிரச்னையில் சுமுக தீர்வு: இரு தரப்பினர் உடன்பாடு

விசைத்தறி கூலி பிரச்னையில் சுமுக தீர்வு: இரு தரப்பினர் உடன்பாடு

பல்லடம்: பல்லடத்தில், விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள், கூலி பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது.திருப்பூர், கோவை மாவட்டங்களில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. மூன்றாண்டுக்கு ஒரு முறை, ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் இடையே கூலி உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். கடந்த, 2014 முதல் உயர்த்தப்பட்ட கூலி வழங்கப்படாதததால், விசைத்தறியாளர்கள் பாதிக்கப்பட்டனர். கூலி உயர்வு வலியுறுத்தி, பல கட்ட பேச்சு நடத்தியும், தீர்வு காணப்படவில்லை. கடந்த, 2022ல், அமைச்சர் சாமிநாதன் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில், கூலி நிர்ணயம் செய்யப்பட்டு இரு தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இருப்பினும், ஜவுளி உற்பத்தியாளர்கள், உயர்த்தப்பட்ட கூலியை வழங்காமல் இழுதடித்தனர். தொடர்ந்து, பேச்சு நடந்து வந்த நிலையில், நேற்றும், இரு தரப்பினரும் பேச்சில் ஈடுபட்டனர்.பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் நாச்சிமுத்து, சண்முகம், சிவா, ஈஸ்வரன் மற்றும் திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி சங்க தலைவர் வேலுசாமி, செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலையில் பேச்சு நடந்தது.சங்க தலைவர் வேலுசாமி கூறுகையில், 'நீண்ட காலமாக உள்ள கூலி பிரச்னை தொடர்பாக இரு தரப்பினரும் ஆலோசனை மேற்கொண்டதில் சுமூக தீர்வு எட்டப்பட்டுள்ளது. இதன்படி, 2022ம் ஆண்டு தீர்மானிக்கப்பட்ட, 20 சதவீத கூலி உயர்வை வழங்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த கூலி உயர்வு நாளை (இன்று) முதல் அமலுக்கு வரும். பல்லடம், கண்ணம்பாளையம், வேலம்பாளையம், மங்கலம் பகுதிகளை சேர்ந்த, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இதன் மூலம் பயனடையும். உயர்த்திய கூலியை வழங்குவதில் ஏதேனும் பிரச்சனை எழுந்தால், இரு தரப்பினரும் தலையிட்டு தீர்வு காண்பது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.

சோமனுார் சங்கம் நிலை என்ன?

சோமனூரை தலைமையிடமாக கொண்ட கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள், கூலி உயர்வை வலியுறுத்தி, ஜூன், 16 அன்று உண்ணாவிரதம் அறிவித்துள்ளனர். இதில், சோமனூர், அவிநாசி, தெக்கலூர், பெருமாநல்லூர் சங்கங்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பல்லடத்தில் நேற்று நடந்த பேச்சில், பல்லடம் விசைத்தறி சங்கத்தின் கீழ் உள்ள பல்லடம், கண்ணம்பாளையம், வேலம்பாளையம், மங்கலம் சங்கங்களுடன் கூலி உயர்வு உடன்பாடு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ