பூச்சி கட்டுப்பாட்டுக்கு தேவை வேலிப்பயிராக ஆமணக்கு
உடுமலை; வேலிப்பயிராக ஆமணக்கு பயிரிடுவதால், முக்கிய பயிரில், நோய் தாக்குதல் வெகுவாக குறைக்கப்பட்டு, சாகுபடி செலவு குறையும் என தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.அத்துறையினர் கூறியதாவது:எந்த பயிர் சாகுபடி செய்தாலும், ஊடுபயிர், வரப்பு பயிர், வேலிப்பயிர், பொறி பயிர் என சில தாவரங்களை கட்டாயமாக, பயிர் திட்டத்தில் சேர்க்க வேண்டும். கவர்ச்சி பயிராக ஆமணக்கு, பொறியல் தட்டை சாகுபடி செய்யலாம்.ஆமணக்கு அகன்ற இலைப்பரப்பு கொண்டுள்ளதால், பயிர்களில் திடீர் தாக்குதல் செய்யும், புருட்டோனியா, பச்சைக்காய் புழு, சாறு உறிஞ்சும் பூச்சிகள், அசுவனி, வெள்ளை ஈ, தத்துப்பூச்சிகள் முதலியவற்றை ஈர்த்து அமரச்செய்யும்.அதிகம் தாக்கப்பட்ட, ஆமணக்கு இலைகளை, தனியாக பிரித்து, முட்டை குவியல்களை எளிதாக அழிக்கலாம். இதனால், பூச்சி கொல்லி மருந்து தெளித்தல் தவிர்க்கப்படுவதுடன், நோய் தடுப்பு பணியும் எளிதாகும்.முக்கிய பயிர் சேதமின்றி, நலமாக பாதுகாக்கப்படுகிறது. ஆமணக்கு, பூசண வித்துகளை காற்றின் மூலம் பரவவிடாமல், தடுத்து, பயிருக்கு பாதிப்புகளை தவிர்க்கிறது.வேலிப்பகுதிகளில், மரங்களை நட்டு பராமரித்து, வேகமாக காற்று ஊடுருவாமல், பார்த்து கொள்ள வேண்டும். இத்தகைய வேலிகளால், பூச்சி மற்றும் நோய் பரவல் கட்டுப்படுத்தப்படும். ஆமணக்கு விதைகளிலிருந்து பெறப்படும், ஆமணக்கு எண்ணைக்கு சந்தை வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு, தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.