உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நால்ரோட்டில் தேவை செக்போஸ்ட்; குடிமங்கலத்தில் எதிர்பார்ப்பு

நால்ரோட்டில் தேவை செக்போஸ்ட்; குடிமங்கலத்தில் எதிர்பார்ப்பு

உடுமலை; குடிமங்கலம் நால்ரோடு பகுதியில், விபத்துகளை குறைக்க தானியங்கி சிக்னல் அமைத்து, நிரந்தர செக்போஸ்ட் ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை விடப்பட்டுள்ளது.பொள்ளாச்சி - தாராபுரம் மற்றும் உடுமலை - பல்லடம் மாநில நெடுஞ்சாலைகள் சந்திக்கும் நால்ரோடு குடிமங்கலத்தில் உள்ளது.இப்பகுதியில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை சந்திப்பு விரிவாக்கத்திட்டத்தின் கீழ், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், 'சென்டர் மீடியன்' மற்றும் வேகத்தடை அமைக்கப்பட்டது.இந்நிலையில், நால்ரோடு பகுதியில், வாகனங்கள் தாறுமாறாக ஒன்றையொன்று முந்திச்செல்ல முயற்சிக்கின்றன. இதனால், போக்குவரத்தில் குழப்பம் ஏற்பட்டு விபத்துகள் அதிகரிக்கின்றன.காலை மற்றும் மாலை நேரங்களிலும், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் விபத்திற்குள்ளாகி வருகின்றனர்.அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவை நால்ரோடு பகுதியில் அமைந்துள்ளதால், மாணவர்கள் மற்றும் வயதானவர்கள் ரோட்டை கடக்க சிரமப்படுகின்றனர். இரு மாநில நெடுஞ்சாலைகளிலும், கனரக வாகனப்போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.இதனால், இந்த சாலைகளில் போக்குவரத்து எந்நேரமும் அதிகரித்து காணப்படும்.இவ்வாகனங்களை தணிக்கை செய்யவும், கண்காணிக்கவும், நால்ரோடு பகுதியில், குடிமங்கலம் போலீஸ் சார்பில் செக்போஸ்ட் செயல்பட்டு வந்தது. குறுகிய நாட்களில் செக்போஸ்ட் செயல்பாடு இல்லாமல் மூடப்பட்டது.இதனால், அங்கு, போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதுடன், கடத்தல் வாகனங்களும் எளிதாக கடந்து செல்கின்றன. இப்பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, குடிமங்கலம் நால்ரோடு பகுதியில், தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும்.அங்கு நிரந்தரமாக போலீஸ் செக்போஸ்ட் அமைத்து, போலீசாரை நியமிக்க வேண்டும் என, கோரிக்கை விடப்பட்டுள்ளது.இதில், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை