உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  சீதோஷ்ண நிலை மாற்றம்; மலை பீன்ஸ் சாகுபடி பாதிப்பு; மலைவாழ் மக்கள் வேதனை

 சீதோஷ்ண நிலை மாற்றம்; மலை பீன்ஸ் சாகுபடி பாதிப்பு; மலைவாழ் மக்கள் வேதனை

உடுமலை: உடுமலை அருகே, மலைப்பகுதிகளில் மட்டுமே சாகுபடி செய்யப்படும், மலை பட்டர் பீன்ஸ், சோயா பீன்ஸ் பயிர் மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக பாதித்துள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் மாவட்டம், உடுமலை, அமராவதி வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதிகளில், மாவடப்பு, குழிப்பட்டி, குருமலை உள்ளிட்ட, 15 மலைவாழ் மக்கள் கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட விவசாய நிலத்தில், சோயா பீன்ஸ், மலை பட்டர் பீன்ஸ் சாகுபடி செய்து வருகின்றனர். சிவப்பு நிற காய்களை கொண்டது சோயா பீன்ஸ் எனவும், வெள்ளை நிற காய்களை பட்டர் பீன்ஸ் எனவும் கூறுகின்றனர். மலைப்பகுதிகளில் மட்டுமே சாகுபடி செய்யப்படும் இவை, ரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை முறையிலேயே விளைவிக்கப்படுவதால், இவற்றுக்கு தனிச்சிறப்பு உள்ளது. ஆண்டு தோறும், நவ., - டிச., மாதங்களில் சாகுபடி செய்யப்பட்டு, ஜன., பிப்., மாதத்தில் அறுவடைக்கு வரும். தற்போது இப்பகுதிகளில், மலை பீன்ஸ் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், இம்மாத துவக்கத்தில் பெய்த கனமழை மற்றும் தற்போது நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக, பீன்ஸ் செடிகள் கடுமையாக பாதித்துள்ளன. இதனால், காய்கள் பிடிக்காமல், மகசூல் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, மலைவாழ் மக்கள் வேதனை தெரிவித்தனர். மலைவாழ் மக்கள் கூறியதாவது: மலைப்பகுதிகளில், ஐப்பசி பட்டத்தில், பீன்ஸ் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு சாகுபடியின் போதும், விதை எடுத்து வைத்து, அடுத்த முறை, உழவு செய்து, விதைப்பு செய்கிறோம். கடந்த மாதம் பெய்த தொடர் மழை மற்றும் தற்போது பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக, செடிகள் பாதித்து, காய்கள் பிடிக்கவில்லை. வழக்கமாக, ஏக்கருக்கு, 30 கிலோ கொண்ட, 50 மூட்டை வரை மகசூல் இருக்கும். தற்போதைய கால நிலை மாறுபாடு காரணமாக, பயிர்கள் பெருமளவு பாதித்துள்ளன. இதனால், நடப்பு சீசனில், மிகவும் குறைந்தளவு மட்டுமே மகசூல் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் பீன்ஸ் சாகுபடி, நடப்பு சீசனில் ஏமாற்றியுள்ளது. இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ